ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

How the WRP Betrayed Trotskyism

தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

பகுதி. 1

 

14. All Power to the GLC !

14. அனைத்து அதிகாரங்களும் GLC க்கே!

1975 க்கும் 1979 க்கும் இடையில் ஒரு பொதுத் தேர்தலுக்கான கட்சியின் போராட்டம், அதனை டோரி கொள்கையின் முன்னெதிர்பார்த்திராத கருவியாக மாற்றியிருந்தது என்றால், உள்ளூராட்சி சபைகளுக்கான (Community Councils) 1981 க்கு பின்னரான அதன் பிரச்சாரம் அதனை சமூக ஜனநாயகத் துரோகத்தினது ஒரு நனவுபூர்வமான முகவராக ஆக்கியிருந்தது. இப்போதிருந்து, WRP தலைமையின் அனைத்து வேலைகளும் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சில பகுதிகளுடன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கூட்டினை அபிவிருத்தி செய்யவே ஒருமுகப்படுத்தப்பட்டது. இப்புதிய நிலைப்பாடு, சில பிரச்சினைகளுக்கு மத்தியில், நடைமுறையளவில் 1981 ஜனவரியில் தொடங்கி வைக்கப்பட்டது.

உள்ளூராட்சி சேவைகளை வெட்டுவதற்கான டோரி கோரிக்கைகளை முகங்கொடுத்திருந்த, ரெட் நைட்டால் (Ted Knight) வழிநடத்தப்பட்ட லம்பேத் (Lambeth) நகரசபையின் தொழிற் கட்சி ஆணையாளர்கள் (Labour Councillors), அரசாங்கத்தை எதிர்த்து போரிட்டு சேவைகளைப் பாதுகாப்பதா அல்லது தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து உள்ளாட்சி வரி வீதங்களை உயர்த்துவதன் மூலமாக மோதலை தவிர்த்துக் கொள்ள முயல்வதா என முடிவெடுக்க வேண்டியிருந்தது.

WRP வரி வீத உயர்வுக்கு எதிராக வந்தது. ஜனவரி 7, 1981, நியூஸ் லைன் தலையங்கம் “அருவருப்பான வேலையைச் செய்யாதீர்” என்று தலைப்பிட்டு எச்சரித்தது:

“டோரி வெட்டுக்களைத் தோற்கடிக்கும் முயற்சியாக உள்ளூராட்சி நகரசபைகளில் (Local councils) வரி வீதங்களை உயர்த்துவென்பது நெருப்போடு விளையாடுவதாகும். வரி வீத உயர்வுகளால் சாதாரணமாக ஈடுசெய்ய முடியாது என்பதால், அது பொருளாதாரரீதியாக அபத்தமானது மட்டுமல்ல, மாறாக அது அரசியல் தற்கொலைக்கு நிகரானது.

“அது மற்ற காரணங்களுக்காகவும் ஆபத்தானது. எரிவாயு, மின்சாரம், வெப்பமூட்டி மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு மிக அதிக கட்டணம் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகிய விடயங்களில் ஏற்கனவே மிகவும் கொடுமையான பிரச்சினைகளை முகங்கொடுத்து வருகின்ற தொழிலாள வர்க்க குடும்பங்கள் மீது அது டோரி கொள்கைகளின் சுமையை மேலும் அதிகமாக இறக்கி வைக்கிறது.

“அது நடுத்தர வர்க்கத்துக்கும் கூட சவுக்கடி கொடுப்பதுடன், டோரி-எதிர்ப்பு கூட்டாளிகளாக இருக்க கூடியவர்களைத் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் கசப்பான எதிர்ப்பாளர்களாக திருப்புகிறது. இதைத்தான் டோரிகள் விரும்புகிறார்கள்.”

ஆனால் மறுநாள், ஜனவரி 8, 1981 இல், லம்பேத் வரி வீதங்களை உயர்த்த நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக நியூஸ் லைன் அறிவித்தது. ஜனவரி 9, 1981 வாக்கில், அது வரி வீத உயர்வை ஆசிரியத் தலையங்கத்திலேயே ஆதரித்தது: "உள்ளூராட்சி சபை கூடுதல் வரி வீதத்திற்கு முடிவெடுக்காமல் இருந்து அது ஒரு கடன் செலுத்தவியலா பெரும் நிதியியல் நெருக்கடியில் போய் முடிந்தால், உள்ளூராட்சி சபை தலைவர்கள் மீது 11.2 மில்லியன் பவுண்ட்டுகள் பற்றாக்குறை கூடுதலாக சுமத்தப்படுவதுடன் அரசு ஆணையர்களால் சபைகள் கையேற்கப்பட வேண்டியும் இருந்திருக்கும். அது டோரிக்களுக்கு மட்டுமே உதவியாக அமையும் என்பதுடன், தன்னாட்சி பெருநகரங்களின் (boroughs) எதிர்காலத்திற்கும் அது ஆபத்தாக இருந்திருக்கும்."

ஏழாண்டுகளுக்கு முன்னர், WRP, சமூக சேவைகளைப் பாதுகாக்க ஒரு புரட்சிகரக் கொள்கையை முன்னெடுத்தது. அது குறிப்பிட்டிருந்தது: "வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை பொதுச் சேவைகள், முதலில் நாட்டின் செல்வத்திலிருந்து உதவி பெறப்படவேண்டும். நிலம், கட்டிடங்கள் மற்றும் கட்டுமானப் பொருள் தொழில்துறை, வங்கிகள், மருந்து உற்பத்திகளை தேசியமயமாக்குவது மட்டுமே இந்த சேவைகளைக் கட்டமைப்பதற்கான ஒரே அடித்தளம்.

“இந்த அத்தியாவசிய பணிகளுக்காக வங்கிகளிடமிருந்தும் கடன் வழங்குவோரிடமிருந்தும் பெறப்பட்ட கடனானது உடனடியாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். தொழிற் கட்சி நகரசபை தலைவர்கள் (கவுன்சிலர்கள்) இந்த கடன்களை நிராகரிப்பதுடன், இந்த அத்தியாவசியமான சேவைகளை வழங்க வேண்டும்." (WRP முன்னோக்குகள், ஆகஸ்ட் 1, 1974 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது)

கட்சியை லம்பேத் சீர்திருத்தவாதிகளின் பின்னால் நிறுத்துவதற்காக, இந்த கொள்கை முழுமையாக தூக்கியெறியப்பட்டது. ஹீலி, ஜனவரி 17, 1981 இல் நியூஸ் லைனின் 24 பக்க சிறப்பு பதிப்பு ஒன்றை வெளியிட ஏற்பாடு செய்தார், அது லம்பேத் நகரசபை தலைவர்கள் மற்றும் ரெட் நைட் மீது பாராட்டுக்களைக் குவிப்பதற்காக அர்பணிக்கப்பட்ட எட்டுப் பக்க துணை இணைப்பையும் உள்ளடக்கி இருந்தது. ஆசிரியர் குழு அறிக்கை ஒன்று, "தொழிற் கட்சி கட்டுப்பாட்டிலான லம்பேத் நகரசபைக்கு முழு ஆதரவு வழங்க" இலண்டனில் "உள்ளாட்சி அரசாங்கத்தின் நெருக்கடி" என்ற மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தது, லம்பேத் நகரசபை "சரியான மற்றும் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக" அந்த அறிக்கை வாதிட்டது.

வரி வீதத்தை உயர்த்துவதற்கான லம்பேத் முடிவுக்கு எதிராக பல்வேறு திருத்தல்வாதக் குழுக்கள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நியூஸ் லைன் இன் வாய்சவடால் வீரர்கள் எழுதினார்கள்: "வரி வீத அதிகரிப்பைக் கொண்டு டோரி வெட்டுக்களை ஈடுசெய்ய முடியாது என்பதையும், அதற்கான அரசியல் விலை பேரழிவுகரமாக இருக்கும் என்பதோடு பொருளாதாரரீதியாகச் செய்யப்பட முடியாது என்பதையும் லம்பேத் நகரசபை தலைவர்கள் தான் முதன்முதலில் ஒப்புக்கொண்டார்கள்.

“ஆனால் இதுவல்ல விவாதம். மத்திய அரசாங்கத்தால் அலுவலகத்தில் இருந்து விரட்டுவதற்கு ஆளாகி, டோரி ஆணையர்களுக்கு வழிவிடும் விதத்தில், திவால்நிலையை அறிவிப்பதா அல்லது தொடர்ந்து நீடிப்பதற்காக தாட்சர்-ஹெசல்டைன் (Thatcher-Heseltine) அழிவுக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதா என்பதுதான் லம்பேத்தில் பிரச்சினையாக உள்ளது...

“லம்பேத் அல்லது வேறெந்தவொரு தொழிற் கட்சி நகரசபையும் அரசியல் தற்கொலை செய்யுமென்று நாங்கள் நம்பவில்லை. அவர்களின் பணி அலுவலகத்தில் இருப்பதும் டோரிக்களுக்கு எதிராக பாரிய இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்காகவும் மற்றும் தாட்சரின் அழிவுக் கொள்கைகளுக்கு எதிராக சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் ஐக்கியப்படுத்துவதற்காகவும் பிரச்சாரம் செய்வதும் ஆகும்...

“திரிபுவாதிகள் விரும்புவதுபோல், பிரதான போராட்டம் ஆரம்பிக்க முன்னரே லம்பேத் போராட்டத்தை இப்போது முடிக்கவேண்டும் என்பது, நகைப்பிற்கு இடமானதும் பிற்போக்குத்தனமானதும் ஆகும்.”

இது குட்டிச் சீர்திருத்தவாத அரசியல்வாதிகளின் வசதிகளை பாதுகாப்பதை தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியில் தங்கியிருக்குமாறு செய்யும் நாடாளுமன்ற கோணல்புத்தியின் சர்வசாதாரணமான மொழியாகும்.

ஹீலி அவரது அரசியலின் ஒத்திசைந்த தன்மையை நேர்மையாக வைப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. வெறும் இரண்டாண்டுகளுக்கு முன்புதான், டோரிகள் தேர்தலில் ஜெயித்தால் தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்துவார்கள் என்பதை WRP அதுவே ஒப்புக் கொண்ட நிலைமைகளின் கீழ், தொழிற் கட்சி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்க வேண்டுமென அவர் வலியுறுத்தி இருந்தார். இப்போது அதே ஹீலி, டோரிக்களுக்குப் பணிய மறுப்பதன் மூலம் தொழிற் கட்சியினர் "அரசியல் தற்கொலை நடத்துவது" அவர்களுக்கு "அபத்தமானதாகவும் பிற்போக்குத்தனமானதாகவும் அமையும்" என்று வாதிடுகிறார்.

ஜனவரி 19, 1981 வாக்கில், நியூஸ் லைன் முழுப் பக்க தலையங்கம் ஒன்று “லம்பேத் நகரசபைக்காக உறுதியாக நிற்போம்” என்று தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. வரி வீதத்தை உயர்த்துவது என்ற தொழிற் கட்சியினரின் முடிவை எதிர்த்த அனைவரையும் கண்டித்ததுடன், முற்றிலும் வெட்கமில்லாமல் தொழிற் கட்சியினருக்கு மன்னிப்பும் கொடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலைகளின் கீழ், ஹீலியின் அயோக்கியத்தனம், "திருத்தல்வாதம்" என்ற வார்த்தையிலிருந்த அனைத்து அர்த்தங்களையும் நீக்கியது. WRP தலைவர்களின் துரோகத்தால், குட்டி-முதலாளித்துவ குழுக்களுக்கு புதிய அந்தஸ்து வழங்கப்பட்டது:

“திருத்தல்வாதிகள் ‘வரிவீத உயர்வு வேண்டாம்’ எனும் தீர்மானத்தை எடுத்து அதனை ஓர் ஒழுக்க பிரச்சினையாக மாற்றுகிறார்கள். பரந்தளவில் மாறியிருந்த புறச் சூழ்நிலையையும் மற்றும் லம்பேத் போன்ற தீர்க்கமான தளங்களில் இருந்து டோரி-விரோத முன்னணியை அபிவிருத்தி செய்வதற்கான மேலோங்கிய அவசியத்தையும் ஒரு கணமும் எண்ணிப் பார்க்காமல், சனிக்கிழமை, லம்பேத் நகரசபை தலைவர்களைத் தோற்கடிக்க அதை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

“வரி வீதங்களை அதிகரிப்பதன் மூலமாக ஒரு தீர்வு என்றவொன்று கிடையாது, மேலும் அங்கே அவ்வாறொன்று இருப்பதாக லம்பேத் நகரசபை ஒருபோதும் கூறியதும் இல்லை. ஆனால் தாட்சருக்கு எதிரான நிலைப்பாட்டை தக்க வைத்திருக்கவும் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களின் பதவிகளில் நிலைத்திருக்கவும், கடந்த வாரம் கூடுதல் வரியை அறிமுகப்படுத்துவதில் நகரசபையின் பெரும்பான்மையினர் மிகவும் சரியாகவே இருந்தனர்...

“பழைய வெற்றிகளை போராட்டமின்றி விட்டுக் கொடுப்பவர்களால் ஒருபோதும் புதியவற்றைச் சாதிக்க முடியாது. அதுபோன்றவொரு தீர்வை உபதேசிப்பவர்கள் உண்மையில் ‘தாட்சரின் ஆட்கள்’ ஆவர், ஏனெனில் அவர்கள் ‘அவரின்’ மொழியைப் பேசுகிறார்கள்...

“வேறு வார்த்தையில் கூறுவதானால், அவர்களின் போலியான 'இடது' வார்த்தைகளின் பின்னால், மற்றும் டோரிகளுக்கு எதிரான 'போர்க்குணமிக்க நிலைப்பாட்டைக்' குறித்த அவர்களின் பேச்சுக்குப் பின்னால், உண்மையில் அவர்கள் லம்பேத்தில் இருந்து தொழிற் கட்சியை வெளியேற்றுவதையும் டோரிக்களை உள்ளே கொண்டு வருவதையும் என்ன விலை கொடுத்தாவது செய்து விட முயற்சிக்கிறார்கள்."

இது, WRP அதன் சந்தர்ப்பவாதத்தினை மூடிமறைப்பதற்காகவும், சமூக ஜனநாயகவாதிகளை எதிர்ப்பவர்களைக் கண்டிப்பதற்காகவும் அது பயன்படுத்திய ஸ்ராலினிச வார்த்தைஜாலங்களே தவிர வேறொன்றுமில்லை. இந்த தலையீடானது, WRP நனவுபூர்வமாக சமூக ஜனநாயகத்தின் ஒரு தொங்குதசையாக மாற்றமடைந்து கொண்டிருந்ததை எடுத்துக்காட்டியதுடன், அவ்விதத்தில் அது ட்ரொட்ஸ்கிசத்தைக் கைவிட்டு மத்தியவாத முகாமிற்குள் செல்வதை முழுமைப்படுத்தியது. 1981 வாக்கில் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக WRP வெளிப்படையாகவே முதலாளித்துவ அரசை பாதுகாத்ததுடன், அரசு அதிகாரிகள் முகங்கொடுத்திருந்த நிதிப் பிரச்சினைகளைக் குறிப்பிட்டுக் காட்டி தொழிலாளர் இயக்கம் மீதான தாக்குதல்களையும் கூட நியாயப்படுத்தியது.

இதே நிலைப்பாடுகளை ஒட்டி, ஜனவரி 20, 1981 இல் நியூஸ் லைன், “நாம் முதலாளித்துவத்தின் கீழ் வாழ்கின்றோம். அத்துடன் முதலாளித்துவம் மிகப்பெரும் நெருக்கடி கட்டத்தில் உள்ளது, இதற்குள் தான் அதிதீவிர பிற்போக்கு டோரி அரசாங்கத்தால் நலன்புரி அரசின் உரிமைகள் நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன," என்பதை ஏற்றுக் கொள்ளாததற்காக, வரி வீத உயர்வுகளைத் தாக்கியவர்களை அது கண்டித்தது.

இந்த வலதுசாரி நிலைப்பாடு, ஹீலியால் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தாலும், பல ஆண்டுகளாக WRP க்குள் குறட்டை விட்டு கொண்டிருந்த சமூக ஜனநாயக பேராசிரியர்களின் ஓர் அடுக்குக்குள் உத்வேகத்தைத் தூண்டியது — இவர்கள் கட்சிக்குள் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டைப் பாதுகாத்தவர்களுக்கு எதிரான ஒரு கன்னை மோதலில் எப்போதெல்லாம் ஹீலியின் தரப்பில் நிற்க வேண்டுமோ அப்போது மட்டும் அவர்களின் கல்வித்துறை குகைகளில் இருந்து வெளிப்பட்டு கொண்டிருந்தார்கள். லம்பேத் சீர்திருத்தவாதிகளைப் பாதுகாக்க ஆர்வத்துடன் முன் வந்தவர்களில் ஒருவர், ஹல் பல்கலைக்கழகத்தின் ரொம் கெம்ப்பை (Tom Kemp) தவிர வேறு யாருமில்லை. அவர், வரி வீத உயர்வை எதிர்த்தவர்களை, 1931 இல் சமூக ஜனநாயக அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்காக இழிவார்ந்த "சிவப்பு வாக்கெடுப்பில்" (Red Referendum) பாசிசவாதிகளுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்த ஜேர்மன் ஸ்ராலினிசவாதிகளுடன் ஒப்பிட்டார். துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால், கெம்ப் இன் கட்டுரை இரண்டாண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அவரின் வேதனைக்குரிய கட்டுரையினூடாக, கெம்ப் "லம்பேத் திருப்பத்தின்" உண்மையான முக்கியத்துவம் குறித்து ஒரு உட்பார்வையை செலுத்தினார்:

““சீர்திருத்தவாதத்தில் இருந்து இப்போது விலகத் தொடங்கி இருக்கும் தொழிலாளர் இயக்கத்தின் பிரிவுகளுக்குள் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) மரியாதையை உயர்த்துவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை இது வழங்குகிறது. இவ்விடயத்தில் எதிர்காலத்தில் திருத்தல்வாத அபாயங்களாக காணப்பட்ட மத்தியவாத போக்குகளுடன் உறவை ஆழப்படுத்தியும் அகலப்படுத்தியும் அவற்றை மிக விரைவில் வெற்றி கொள்ள முடியும்.”” (நியூஸ் லைன், பெப்ரவரி 21, 1981)

15. The WRP Attacks the Trade Unions

15. WRP தொழிற் சங்கங்களைத் தாக்குதல்

மே 1981 இல், தொழிற் கட்சியினர் உள்ளூராட்சி தேர்தல்களில் வெற்றிபெற்று, பெரிய இலண்டன் நகரசபையில் (GLC) பெரும்பான்மையை பெற்றனர், இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவ அரசைப் பாதுகாத்து கொண்டிருந்த உள்ளூர் அரசாங்கத்தில் உள்ள "மத்தியவாத போக்குகளுடன்" WRP தலைமை அதன் உறவுகளை விரிவாக்க வாய்ப்பை வழங்கியது. வர்க்கப் போராட்டம் சம்பந்தமான இந்த திருப்பத்தின் முக்கியத்துவம் மிகவும் பட்டவர்த்தனமான முறையில் விரைவிலேயே எடுத்துக்காட்டப்பட்டது.

ஜூனில், சுரங்கப் பாதை போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் சங்கம் 15 சதவீத சம்பள உயர்வு பெறுவதற்கு வேலைநிறுத்த அச்சுறுத்தலை விடுத்தது. ஜூன் 26, 1981 தேதியிட்டு "திரு வெய்ஹெல்ஸின் ஏமாற்று நாடகம்" (Mr. Weighell's Double-Cross) என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தில் நியூஸ் லைன் பதிலளித்தது:

“ஒட்டுமொத்த வேலைநிறுத்தத்திற்காக இலண்டன் சுரங்கப்பாதை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிட்னி வெய்ஹெல் (Sidney Weighell) அழைப்பு விடுப்பதை ஒரேயொரு விதத்தில் மட்டுமே விவரிக்க முடியும் — இது பெரிய இலண்டன் நகரசபை தலைமையிலான புதிய இடதுசாரிகளை மதிப்பிழக்க செய்வதை இலக்காகக் கொண்ட வலதுசாரிகளின் ஓர் ஆத்திரமூட்டலாகும்...

“அவரின் தொழிற்சங்க மாநாட்டுக்கு ஒருசில நாட்களே இருந்த நிலையில், வெய்ஹெல், இலண்டன் பொது போக்குவரத்தை நேரடியாக கட்டுப்பாட்டில் கொண்டிருந்த GLC ஐ அது விரும்பாத ஒரு மோதலுக்குள் தள்ளிவிட தயாரானார்...

“டோரி அரசாங்கத்திற்கு எதிரான பிரதான போராட்டத்துக்கு, பகுதியான கோரிக்கைகள் அடிபணியச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை தொழிலாளர் புரட்சிக் கட்சி விடாது வலியுறுத்தி உள்ளது. தொழிலாளர்களுக்கும் தொழிற் கட்சியின் நகரசபைகளுக்கும் இடையிலான மோதல்களால் தாட்சர் மட்டுமே பயனடைவார்.

“ஆனால், லிவிங்ஸ்டனுக்கு எதிரான அவரின் வசைபாடல் ஊர்ஜிதப்படுத்துவதைப் போல, டோரிகளுக்கு எதிரான போராட்டத்தில் வெய்ஹெல் க்கு அக்கறை இல்லை. சுரங்கப் பாதை போக்குவரத்து துறையின் NUR உறுப்பினர்கள் அவரது முடிவை நிராகரித்து, பிரதான எதிரிக்கு எதிராக —தாட்சர், ஹெசெல்டைன் மற்றும் ஃபௌவ்லெர்— பெரிய இலண்டன் நகரசபையுடன் உறுதியாக நிற்க வேண்டும்."

ஜூலை 4, 1981 இல் நியூஸ் லைன் கோரியது:

“இரயில்வே தொழிலாளர்களின் தேசிய சங்கத்திற்கும் (National Union of Railwaymen - NUR) தொழிற் கட்சி தலைமை தாங்கும் பெரிய இலண்டன் நகரசபைக்கும் இடையேயான இலண்டன் போக்குவரத்து சம்பள கோரிக்கை மீதான மோதல் என்ன விலை கொடுத்தேனும் தவிர்க்கப்பட வேண்டும்.

“சுரங்கப்பாதை தொழிலாளர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ள ஜூலை 20 இல் இருந்து தொடங்கும் வேலைநிறுத்தமானது, தொழிலாளர் இயக்கத்திற்கும் தொழிற்சங்க இயக்கத்திற்கும் இடையிலான ஒற்றுமையில் ஓர் அபாயகரமான உடைவை உருவாக்கும் என்பதுடன், டோரிக்கள் இதை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள விரைவார்கள்...

“GLC க்கும் NUR க்கும் இடையிலான எந்தவித சம்பள பேச்சுவார்த்தைகளும் இத்தகைய அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வின் உண்மைகளை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்...

“தொழிற்சங்கங்களுக்கு அவற்றின் முழு கோரிக்கையை முன்னெடுக்க உரிமை உள்ளது, அத்துடன் தொழிற் கட்சி தலைவர் கென் லிவிங்ஸ்டன் தான் அவர்களுக்கு இந்த உரிமையை மறுக்கக்கூடிய கடைசி மனிதராக இருப்பார்.

“ஆனால் அதேபோல், டோரிகளுக்கு எதிரான நகரசபை போராட்டத்தில் அதனுடன் வெய்ஹெல் நல்லிணக்கத்துடன் நிற்க வேண்டுமென கோருவதற்கு GLC தலைவர்களுக்கும் உரிமை உள்ளது."

இவ்வாறு, ஒரு வேலைநிறுத்த நிகழ்வின் போது, தொழிற்சங்கத்திற்கு எதிராக GLC என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் அவற்றை WRP ஆதரிக்கும் என்பதை, ஒற்றுமையின் பெயரில், அது தெளிவுபடுத்தியது. ஜூலை 8, 1981 இல், நியூஸ் லைன் லிவிங்ஸ்டனின் முழு பக்க கடிதம் ஒன்றை பிரசுரித்தது. இது GLC இன் நிலைப்பாட்டை பாதுகாத்தது — அவ்விதத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக WRP க்கும் லிவிங்ஸ்டனுக்கும் இடையிலான முழுமையான நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

இரண்டாம் உலக போரின் போதும் மற்றும் 1937 இல் ஸ்பெயினிலும் ஸ்ராலினிஸ்டுகளினது நிலைப்பாட்டுக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான ஹீலியின் நிலைப்பாட்டிற்கும் இடையே ஒரு இம்மியளவு வித்தியாசமும் இருக்கவில்லை. அவ்விடயங்களில், ஸ்ராலினிஸ்டுகள், "பாசிச-எதிர்ப்பு" போராட்டம் என்றழைக்கப்பட்டதன் தேவைகளுக்காக தொழிலாள வர்க்கம் அதன் நலன்களை அடிபணிய செய்து கொள்ள வேண்டுமெனக் கோரினர், தொழிலாளர் புரட்சிக் கட்சியோ "பிரிந்து கிடக்கும் போராட்டங்கள்" —அதாவது, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள்— "டோரி அரசாங்கத்திற்கு எதிரான பிரதான போராட்டத்திற்கு அடிபணியச் செய்யப்பட வேண்டும்," என்று வலியுறுத்தியது.

எரிச்சலூட்டும் விதத்தில் இச்சொற்றொடர் ‘போராட்டம்’ என்ற வார்த்தையைக் கொண்டு விளையாடியதற்கு நிகராக இருந்தது. ட்ரொட்ஸ்கிஸ்டுகளைப் பொறுத்த வரையில், தொழிலாள வர்க்கம், பாரம்பரிய வலதுசாரி தலைவர்களுடன் மட்டுமல்ல மாறாக மிக முக்கியமாக இடதுகளுடன் மோதலுக்கு நுழையும் போதுதான், முதலாளித்துவ எதிரிக்கு எதிராக வர்க்கப் போராட்ட அபிவிருத்தியின் மிக முக்கிய கட்டம் வருகிறது. இது, தொழிலாள வர்க்கம் புரட்சிகர போராட்டத்தை நோக்கி ஒரு பாதை எடுக்க முயல்கிறது என்பதற்கு தவறுக்கிடமற்ற ஒரு அடையாளமாகும்.

தொழிலாள வர்க்கம் தொழிற் கட்சி இடதுகளிடம் இருந்து அதன் முக்கிய ஆதரவை விலக்கிப் பார்க்க தொடங்குகின்ற போது இருப்பதை விட, வேறு எப்போதும் பிரிட்டனில் முதலாளித்துவ சமூகம் அந்தளவுக்கு மிகப் பெரிய ஆபத்தில் இருப்பதில்லை. ஆனால் திட்டவட்டமாக இந்த கட்டத்தில் தான், WRP, இத்தகைய சீர்திருத்தவாத வார்த்தைஜால பேச்சாளர்களின், அவ்விதத்தில் முதலாளித்துவத்திற்கே கூட, மிகவும் நனவுபூர்வமான பாதுகாவலராக செயல்பட்டது. இந்த இடதுகள் மீது கோரிக்கைகள் வைக்க மறுத்தும் —அவ்விதத்தில் அவர்கள் முதலாளித்துவத்துடன் உறவை முறித்துக் கொள்ள மறுப்பதை மிகவும் தெள்ளத்தெளிவான விதத்தில் அம்பலப்படுத்த மறுத்தும்— WRP தலைமை அவர்களுக்குச் சார்பாக தொழிலாள வர்க்கத்தை ஒழுங்குப்படுத்த செயல்பட்டது. WRP திரட்டியிருந்த அனைத்து அளப்பரிய வளங்களும் தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் சோசலிசப் புரட்சிக்கான பாதைக்கும் ஒரு அளப்பரிய முட்டுக்கட்டையை உருவாக்க பயன்படுத்தப்பட்டன. முழுமையான அரசியல் மற்றும் வரலாற்று அர்த்தத்தில், ஜெரி ஹீலி தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு துரோகியாக, மார்க்சிசத்திற்கு ஒரு எதிரியாக, மற்றும் தொழிலாளர் இயக்கத்திற்குள் முதலாளித்துவத்தின் ஓர் அரசியல் முகவராக மாறியிருந்தார்.

தொழிலாள வர்க்கம் மீதான அவரின் மிகப்பெரும் காட்டிக்கொடுப்பானது பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்திற்குள் நேரடியான மற்றும் பேரழிவு தரும் அரசியல் விளைவுகளைக் கொண்டிருந்தன. தொழிலாள வர்க்கத்திடமிருந்து ஒரு புரட்சிகர முன்னேக்கை பறித்தெடுக்க WRP நனவுபூர்வமாக செயல்பட்டது. இடது சீர்திருத்தவாதிகளின் —மூலதனத்தினது துரதிர்ஷ்டவசமான இந்த சேவகர்களின்— கொள்கைகளுக்கு அங்கே வேறெந்த மாற்றீடும் இருக்கவில்லை என்று அது நாளும் பொழுதும் வேறு விதமாக வாதிட்டது. WRP, அவர் தலைமையின் கீழ், தொழிலாள வர்க்கத்திற்குள் மனச்சோர்வையும் குழப்பத்தையும் விதைத்தது. தன்னைத்தானே புரட்சிகரமானதாக அழைத்துக் கொள்ளும் ஓர் அமைப்பு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இதை விட பெரிய குற்றம் செய்திருக்க முடியாது. WRP இன் சேதி இதுதான்: தொழிற் கட்சியினர் அதிகாரத்தில் இருக்கிறார்கள் —உங்கள் போராட்டங்களைக் கைவிடுங்கள்— உங்களின் சம்பள கோரிக்கைகளைக் கைவிடுங்கள் —சீர்திருத்தவாதிகளுடன் நல்லிணக்கத்தைப் பேணுங்கள்— உங்கள் தலைவிதியை அவர்கள் கரங்களில் ஒப்படையுங்கள் — அத்துடன், கடவுள் புண்ணியமாக, வீதிகளை விட்டு கலைந்து வீட்டுச் செல்லுங்கள்.

16.  Towards the Party of Law and Order

16. சட்ட ஒழுங்கிற்கான ஒரு கட்சியை நோக்கி

GLC க்கு சார்பாக WRP தொழிற்சங்கங்களுடன் போராடி கொண்டிருந்த அதேவேளை, வர்க்க போராட்டத்தின் மற்றொரு முனையில் பிரச்சனைகள் அபிவிருத்தி அடைந்து கொண்டிருந்தன. இலண்டன், மான்செஸ்டர் மற்றும் லிவர்பூலில் ஒடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் முதலாளித்துவத்தின் சீரழிந்த நிலைமைகளுக்கு எதிராகவும், பொலிஸின் கொடுமை மற்றும் இனவாதத்திற்கு எதிராகவும் திரண்டெழுந்தனர். இந்த கிளர்ச்சிகள் தாட்சரை நோக்கிய இளைஞர்களின் வெறுப்பை மட்டுமல்ல, மாறாக நகர உட்பகுதி சேரிகளின் கண்காணிப்பாளர்களாக செயல்பட்டு வந்த சமூக ஜனநாயக அலுவலக சிப்பந்திகளினது பணக்குவியல்கள் மீதான அவர்களின் அவமதிப்பையும் வெளிப்படுத்தின. இந்த கிளர்ச்சிகள் எவ்வகையிலும் தற்செயலானவை இல்லை என்பதோடு, தொழிற் கட்சியினரின் தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புகளால், அதாவது பொறுமையாக இருக்குமாறு அவர்களின் நயவஞ்சக முறையீடுகள், முதலாளித்துவ அரசு படைகளுக்கு எதிராக இளைஞர்களை அணித்திரட்ட அவர்கள் மறுத்தமை, மற்றும் அவர்களின் நிலைமைகளை மேம்படுத்த அவர்கள் தகைமையற்று இருந்தமை என இவற்றால் உருவாகி இருந்த விரக்தியின் வெளிப்பாடாக இருந்தன.

பிரிக்ஸ்டன் மற்றும் ரொக்ஸ்ரெத்தில் ஆயிரக் கணக்கான இளைஞர்களால் WRP ஆனது சீர்திருத்தவாதிகளின் கூட்டாளிகளாகவே பார்க்கப்பட்டது என்ற உண்மை, அவர்களின் விரக்தியைத் தீவிரப்படுத்த மட்டுமே செய்ததுடன், தன்னியல்பான எழுச்சி மூலமாக அல்லாமல் அவர்களின் கண்ணோட்டங்களைத் தெரியப்படுத்துவதற்கு வேறு வழி இல்லாதோராய் அவர்களை மாற்றியிருந்தது. இந்த கிளர்ச்சிகளுக்குத் தலைமையும் வேலைத்திட்டமும் இல்லாமல் இருந்தன என்பதற்கு பெரிதும் WRP தான் பொறுப்பாக்கப்பட வேண்டும். 1981 கோடையில், டோரிக்கள் மற்றும் அவர்களின் சீர்திருத்தவாத சேவகர்களை எதிர்த்து போராடுவதற்கு வழி தேடிய கிளர்ச்சிகரமான இளைஞர்களுக்கு WRP என்ன மாற்றீட்டை வழங்கி இருக்க முடியும்? இடது பேச்சாளர்கள் வழிநடத்திய "டோரி-எதிர்ப்பு" போராட்டம் குறித்த அதன் பேச்சுக்கள், இத்தகைய நம்பிக்கையற்ற நாடாளுமன்றவாதிகளை இயல்பாகவே அவமதித்து ஒதுக்கிய இளைஞர்களுக்கு நகைப்பூட்டுவதாக மட்டுமே தோன்றியிருக்க முடியும். தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு திருப்பத்தை அது பரிந்துரைக்கவும் முடியாமல், WRP, வெறுமனே GLC இன் சட்டதிட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறு தொழிற்சங்கங்களுக்கு அறிவுறுத்தியது. சுருங்கச் சொன்னால், இளைஞர்களுக்குக் காட்டுவதற்கு WRP வசம் ஒரு முட்டுச்சந்தை தவிர வேறொன்றும் இருக்கவில்லை.

முதலாளித்துவ அரசின் சீர்திருத்தவாத ஏஜண்டுகளுக்கு WRP தலைவர்களின் சரணாகதியின் அரசியல் தர்க்கமானது, எழுச்சிகள் பற்றிய அவர்களின் வெறித்தனமான கண்டனங்களில் —எழுச்சிகளை அவர்கள் வழக்கமான பாணியில் கலவரங்கள் எனக் குறித்ததில்— மற்றும் வெடிக்கும் பதட்ட நிலைக்கான உண்மையான புறநிலை அடிப்படை ஏதும் இருப்பதாக மறுக்கும் அவர்களது முயற்சிகளில் மிக ஒழுக்கங் கெட்ட வெளிப்பாட்டைக் கண்டது. பதிலாக நியூஸ் லைன் எழுச்சிகளை உண்மையில் அரசு ஆத்திர மூட்டல்கள் என வலியுறுத்தியது. இந்தச் சூத்திரப்படுத்தல் ‘டோரி எதிர்ப்பு போராட்டம்’ எனும் பெயரில் எழுச்சி கொண்ட இளைஞர்களைக் கண்டனம் செய்ய WRP தலைவர்களுக்கு வசதியாக அனுமதி அளித்த அதேவேளை, முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் தலைமை தாங்கிய பிராந்திய தொழிற் கட்சி அரசாங்கங்கள் மீது எவ்வித தாக்குதலையும் தவிர்த்தது.

"தொழிற் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகரசபைகள், கலவர பாதிப்புகளாலும் அதிக பொலிஸ் செலவுகளாலும் கூடுதல் கடனில் மூழ்கடிக்கப்பட்டு வருகின்றன," என்று ஜூலை 11, 1981 நியூஸ் லைன் பதிப்பில் வெளியான ஒரு தலையங்கத்தில் WRP கருத்துரைத்தது. கலவரம் நடந்த பகுதிகளில் இருந்து படைகளை வெளியேற்ற வேண்டுமென GLC யை கோருவதன் மூலம் ஏன் WRP இந்த பிரச்சினையைக் கையாளவில்லை?

ஜூலை 18, 1981 இல், "கலவரங்கள்: பொலிஸ்-இராணுவ ஆத்திரமூட்டல்?" என்று தலைப்பிட்ட WRP அரசியல் குழுவின் அறிக்கை ஒன்றை நியூஸ் லைன் பிரசுரித்தது. அது, "பிரிட்டனில் இரத்தம் தோய்ந்த மோதலை உண்டாக்குவதற்காக செயல்பட்டு" வந்த அரசினது விசேட முகவர்களால் திட்டமிடப்பட்ட சதியின் விளைபொருள் தான் இந்த கிளர்ச்சிகள் என்று நிரூபிக்க முயன்றது. இந்த "கலவரங்கள்", "அரசாங்க எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் எதிராக பயங்கரவாதத்தையும் அச்சுறுத்தலையும் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முன்கூட்டிய ஒரு வன்முறை தாக்குதலை" நடத்த டோரிக்களுக்கு உதவுவதற்காகவே முடுக்கிவிடப்பட்டு இருந்தன என்று அது வாதிட்டது.

"பொலிஸ் ஊடுருவல்காரர்கள் மற்றும் இராணுவ உளவுத்துறையின் ஆத்திரமூட்டுபவர்களுக்கு எதிராக முழுமையாக விழிப்புடன் இருக்க" அழைப்பு விடுத்து WRP வலியுறுத்துகையில், அந்த கிளர்ச்சி "வெறுமனே டோரி கொள்கைகளால் நடத்தப்பட்ட சமூக இழப்புகள் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான ஒரு தன்னெழுச்சியான வெடிப்பல்ல. மாறாக, ஒவ்வொரு சம்பவமும் திட்டமிட்டு வேண்டுமென்றே பொலிஸ் சிறப்புப்படை பிரிவுகளின் நடவடிக்கைகளால் உண்டாக்கப்பட்டதாகும்," என்று வலியுறுத்தியது.

கிழக்காசிய மற்றும் கறுப்பின சமூகத்தின் பெரும் பகுதியினரை ஆத்திரமூட்டலாளர்களாக அல்லது அவர்களின் பதிலாட்களாக வசைபாடி துஷ்டர்களாக காட்டி, "ஜன்னல்களை தகர்ப்பதையும் கொள்ளை அடிப்பதையும் தடுக்க பொலிஸ் முற்றிலும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை" என்று, இந்த கோழைத்தனமான அயோக்கியர்கள் குறை கூறினார்கள்.

GLC இன் ஊதுகுழலாக செயல்பட்ட WRP அரசியல் குழு ஆத்திரத்துடன் குறிப்பிடுகையில், "கலவரங்கள் நடந்த எல்லா நகரங்கள் மற்றும் தன்னாட்சி பெருநகரங்களும் தொழிற் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தவையாகும்," என்றது. இந்த அரசியல் சூழ்நிலையின் முக்கியத்துவத்தை பகுத்தாராய்வதற்குப் பதிலாக, ஹீலியவாதிகள் சீர்திருத்தவாதிகளுக்கு அவர்களின் அனுதாபத்தை வழங்கினர்: "ஹெசல்டைன் ஒரு பைசா கூட விட்டுக் கொடுக்க மறுத்த நிலைமைகளின் கீழ் கலவர சேதங்கள் அவர்களின் அன்றாட செலவுகளை இன்னும் பேரளவில் அதிகரிக்க உள்ளது. இந்த பிராந்திய அதிகாரிகள் அத்தியாவசிய சமூக சேவைகளில் மிஞ்சி இருப்பதைப் பாதுகாக்கவும் பொலிஸ் வேலைகளுக்குமான செலவுகளையும் சமாளிக்க முடியாத நிலைமை இன்னும் வேகமாக நெருங்கி கொண்டிருக்கிறது."

அந்த அறிக்கை பின்வருமாறு நிறைவு செய்யப்பட்டிருந்தது: “பொலிஸ் ஆத்திரமூட்டல்களுக்குள் சிக்கி, சூறையாடல்கள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எங்களின் முழு எதிர்ப்பை மீளவலியுறுத்துகிறோம். இது, அவர்கள் முகங்கொடுக்கும் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்கப் போவதில்லை, நிஜமான போராட்டம் டோரிகளுக்கு எதிராகவும் சமூகப் புரட்சிக்காகவும் என்பதால் இது வைட்லோ (William Whitelaw) இன் தடுப்பு முகாம்களுக்கு மட்டுமே ஆட்களை வழங்கும்."

இந்த அறிக்கையை எழுதியவர்களையும் இதற்கு வாக்களித்தவர்களையும் பிறிக்ஸ்டன் மற்றும் ரொக்ஸ்ரெத் வீதிகளில் நிர்வாணமாக ஓட விட்டு அவர்கள் மீது காரி துப்ப செய்ய தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். டோரி நீதியரசர் ஸ்கார்மன் பிரபுவின் நீதி விசாரணைக்குழுவால் பல மாதங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அவரின் ஆணைக்குழு அறிக்கையில் எதை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டாரோ அதைக் கூட ஹீலியினது அரசியல் குழுவின் பிற்போக்கு பாசாங்குக்காரர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இளைஞர்களின் கிளர்ச்சிகளுக்கு அங்கே புறநிலை காரணங்கள் இருந்ததை அந்த அறிக்கை ஒப்புக் கொண்டிருந்தது.

டிசம்பர் 1981 இல், ஸ்கார்மன் அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பின்னர், WRP பொதுச் செயலாளர் பண்டா நியூஸ் லைனில் எட்டு பக்கங்களுக்கு விரிந்து கிடந்த ஒரு நீண்ட கட்டுரையில் அதன் கண்டுபிடிப்புகளுக்குப் பதிலளித்தார். அது கிளர்ச்சி சம்பந்தமான கட்சி நிலைப்பாட்டால் உருவாக்கப்பட்டிருந்த துர்நாற்றத்தைச் சுத்திகரிக்கவும், பிரிக்ஸ்டன் மற்றும் ரொக்ஸ்ரெத் இளைஞர்கள் மத்தியில் WRP இன் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும் ஒரு காலங்கடந்த முயற்சியாக இருந்தது. அனேகமாக அது பண்டாவின் தரப்பில் அவரின் சொந்த மனச்சாட்சியுடன் கணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு முயற்சியாக கூட இருந்திருக்கலாம்.

பண்டாவின் பகுப்பாய்வு திட்டமிடப்படாத ஒன்றாக ஆனால் WRP அரசியல் குழுவின் நிலைப்பாடு மீதான ஒரு நாசகரமான குற்றப்பத்திரிகைக்கு நிகராக இருந்தது. கிளர்ச்சிகளின் போது உயிரிழந்த இளைஞர்களை நினைவுகூர்வதற்காகவும் மற்றும் "பொலிஸ் பயங்கரவாதம் மற்றும் டோரி அரசாங்க ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக தங்களின் வீடுகள் மற்றும் சமூகங்களைப் பாதுகாத்த ஆயிரக் கணக்கான இளைஞர்கள் மற்றும் வயதான தொழிலாளர்களின் உறுதி, ஒற்றுமை மற்றும் தைரியத்திற்கும்" அவர் கட்டுரையை அர்பணித்து, சம்பவங்களைக் குறித்த பண்டாவின் பதிப்பு, அதற்கு முந்தைய கோடையில் WRP கூறிய வாதங்களுடன் முற்றிலும் முரண்பட்டிருந்தது.

இளைஞர்களை ஆத்திரமூட்டுபவர்கள் என்று முத்திரை குத்துவதிலிருந்து விலகி, பண்டா அவர்களின் போராட்டத்தைப் புகழ்ந்திருந்தார்: "வாரம் முழுவதும் அவர்கள் பெருநகர பகுதிகள் எங்கிலும் இருந்து திரட்டப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான பொலிஸிற்கு எதிராக வீதிகளை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தார்கள்...

"பிரிக்ஸ்டன் எரிந்தது. ஆனால் தீவைப்பு, சொத்துக்களை விட அதிகமானதை அழித்தது. அது, பல தொழிலாளர்களின் மனங்களில், அரசு ஒடுக்குமுறை சக்திகளுடன் —பொலிஸ் உடன்— சமாதான சக வாழ்வில் இருப்பது சாத்தியமே என்ற எந்தவொரு நம்பிக்கையையும் அழித்தது. அது, மில்லியன் கணக்கானவர்களை முடிவின்றி வறுமை மற்றும் இழப்புகளுக்குள் தள்ளியிருந்த டோரி அரசாங்கம் மீதும் மற்றும் திவாலான முதலாளித்துவ அமைப்புமுறை மீதும் நிலவிய அவர்களின் தணிக்கவியலா வெறுப்பைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது." (நியூஸ் லைன், டிசம்பர் 5, 1981)

பண்டாவின் ஆவணம் ஹீலியை அம்பலப்படுத்தவோ அல்லது கட்சியைத் திருத்தவோ எழுதப்படவில்லை. இப்போது கிளர்ச்சிகள் பாதுகாப்பாக முடிந்து விட்டிருந்தன மற்றும் ஸ்கார்மன் பிரபுவின் ஆய்வு முடிவுகள் கடந்த கோடைகால வீதி மோதல்களை ஒரு குறிப்பிட்டளவு நியாயபூர்வமாக ஆமோதித்திருந்தது, ஆகவே WRP இன் கடந்தகால வரலாற்றை மூடிமறைக்கும் விசேட பணி பண்டாவினுடையதாக இருந்தது. ஆனால் அவர் ஒரு விடயத்தில் சரியாக இருந்தார். பிரிக்ஸ்டன் எரிந்தது மற்றும் தீக்கிரையாக்கிய நடவடிக்கைகள் சொத்துக்களை விட அதிகமானதை அழித்திருந்தன. அது, தொழிலாள வர்க்க இளைஞர்களிடையே WRP தலைமை மீதிருந்த அரசியல் நம்பகத்தன்மையை அழித்திருந்தது.